Friday, September 11, 2009

ஆதிச் சொல்

 















  எதுவும் பேசிவிடாதே
சொற்களை நான் வெறுக்கிறேன்.
இன்னமும் உபயோகிக்கப்படாமல்
துருப்பிடித்துக் கிடக்கின்றன
என்னுள் சில சொற்கள்.
பிரார்த்தனையின் யாசகச்சொல்
மன்னிப்பின் கண்ணீர் சொல்
பிரிவின் வலிமிக்கச் சொல்
இனி
எதையும்பயன்படுத்தமாட்டேன்.
நீ
செவிகளில் சேனம் கட்டியக் குதிரை
வழியெங்கும் இறைந்து கிடக்கின்றன
வார்த்தைகளின் லட்சம் பிரேதங்கள்
நீயும் எதுவும் பேசிவிடாதே...
நான் பேசியபோது செவிடாகவும்
பாவனை செய்தபோது
குருடாகவும் இருந்துவிட்டாய்
பதில் சொல்லவெண்டிய கணத்தில்
நீ ஊமையாகிப் போனதால்
உயிர்மரித்தது சொற்கள் மட்டுமல்ல
நம் உறவுகளும்தான்.
ஆயினும் ஒப்புக் கொள்கிறேன்
நம் ஆதிச் சொல்லில் அன்பிருந்தது.

மாமழை போற்றுதும்


தவிர்க்க இயலாது
ஒருபோதும் மழையை
குடை பிடித்தாலும்
பாதம் தொடும்.
 
 அவ்வப்போது
பூமியை நிராகரிக்கும் மழை
ஒருபோதும்
மழையை நிராகரித்ததில்லை
பூமி.

 

 துளி பெய்து பெருகும்
துளியோடும் போகும்
மழையை யார் கேட்பது.

















நீ அசைத்த கிளை பெய்த மழைபோல்
 இல்லை ஒரு மழையும்.






















மழை பெய்யும்போதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
இப்பொதெல்லாம்
அடிக்கடி மழை பெய்கிறது.















பூமி கொடுத்தது யாருக்கும் தெரியாது
மழை
வானத்தின் கொடைதான்.

















இலைகளற்ற
இந்தக் கோடையில்
நீ வந்து சென்றதை
எந்தப் பூப்பூத்துக் கொண்டாடுவது நான்.


Thursday, September 10, 2009

மழைக் குடை



அவளற்ற தனிமையில்
மழைக்கு ஏங்கும் குடை போல
அவளுக்காக காத்திருக்கிறேன்.

வெளிகளின் மனுசி

பூமிப் பந்தை
உதைத்துப் புறப்படுகிறது
அவள் கால்கள்.

சின்னஞ்சிறிய கூந்தலில்
வானவில்லை சூடிக் கொண்டிருக்கிறாள் .

தெத்தி விளையாடும் அவள் பாதங்களில்தான்
மழைத் துளிகள் உருவாகின்றன .

எப்போதேனும் வியர்வை பூத்தால்
நிலவை எடுத்து முகம் துடைத்துக் கொள்கிறாள் .

கோபம் கொள்கையில்
சூரியன் அவள் விழிகளாகிறது.

மொத்தத்தில்
வெளிகளின் மனுசி அவள்.
என் தளிர்களின் பனித்துளியில்
எப்போதும் காணக்கிடைப்பவள்.

மாய மனுசி

தூரங்களைக் கடந்து
அவள் வந்தாள்.
அது
நீண்ட ...நெடும் பயணமாய்
இருந்தது .
என் காலங்களுக்குள்
அவளை இட்டு நிரப்பி
தாழிட்டேன் .

பின் ஒரு பொழுது
அவளைப் பார்க்கும் தாகத்தோடு
என் கால அறை திறந்தேன் .
ஒரு துளி மழை இருந்தது .

துளி மழையால்
ஒரு கடல் செய்தேன் .
கடலுக்குள் மறைந்தது
நிலம் .

என் பாற்கடல் கடைந்து
அமுதம் தேடினேன் .
நீல விஷமாய் என்னுள்
நிறைந்தாள்.

அறையெங்கும் பேரிசையாய்
பெருகியது
அவளது அலைஓசை .
அலைகளின் சுழலில்
பெருங்காற்று சுழன்றேழ
பற்றியெரிந்தது
என் வனம் .
வனமெங்கும் நெருப்பாய் அவள் .

மழையாய் பெய்தாலும்
கடலாய் பெருகினாலும்
கற்றாய் சுழன்றாலும்
கை விரல் கோர்க்க
அனுமதித்ததில்லை
அந்த மாய மனுசி .

தாயுமானவளுக்கு...

ஒற்றை சூரியன் ஒற்றை நிலவு
என் உலகை ஆள்பவள் நீ தானே !
பித்தம் தெளிய என்னை எடுத்து -புதுப்
பிறவி தந்த நீ தாய்தானே..!

அச்சம் விலக்கி வெட்கம் தவிர்த்-துன்
திருவடி தொழுவத்தில் தவறுண்டோ ?
அன்பில் உருகி ஆயுள் உருக்கி -உன்
பூமியில் படைப்பது முறையன்றோ ?

தூரம் தொடரும் துயரம் தொடரும் -என்
துய்மை மட்டும் தொலையாது
பார்வைச் சுடரில் பயணம் மறந்-துன்
பாதை மாற முடியாது.

எங்கோ ஒரு நதி எங்கோ ஒரு துளி-யிது
எல்லாம் கடலாய் மாறாதா?
எங்கோ உன் விழி எங்கோ என் மொழி -ஒரு
இலக்கில் ஒன்று சேராதா?